Thursday 3 November 2022

QSF39. எந்த கடவுளை நம்பினாலும் மனக்கவலை தீருமா?

 

இப்படியும் சில தப்ஸீர்கள்- ஜைனுலாபுதீன் தப்ஸீர்


ஜைனுலாபிதீன் அவர்களின் தப்சீரில் அறிவியலின் பெயரால் சொல்லப்பட்டிருக்கும் பிழையான கருத்துக்களை ஆய்வு செய்வதற்காக 2017ம் ஆண்டு அமைக்கப்பட்ட குழு சமர்ப்பித்த ஆய்வறிக்கைகள்


அறிமுகத்தை வாசிப்பது இந்த தொடரை புரிந்துகொள்ள உதவும். அறிமுகத்தை வாசிக்க https://www.piraivasi.com/2022/11/zina-ul-abdeen-intro.html


QSF ஆய்வுக்குழு




QSF 39 எந்த கடவுளை நம்பினாலும் மனக்கவலை போகுமா

தஃப்ஸீர்: 477. மன அழுத்தத்துக்கு மாமருந்து

13:28. நம்பிக்கை கொண்டோரின் உள்ளங்கள் அல்லாஹ்வின் நினைவால் அமைதியுறுகின்றன. கவனத்தில் கொள்க! அல்லாஹ்வின் நினைவால் தான் உள்ளங்கள் அமைதியுறுகின்றன.

அல்லாஹ்வின் நினைவால் உள்ளங்கள் அமைதியுறுகின்றன என்று இவ்வசனத்தில் (13:28) கூறப்படுகிறது.

கடவுள் நம்பிக்கை உள்ளவர்களுக்கு மனஅழுத்தம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைவு என அமெரிக்க ஆய்வில் தெரிய வந்துள்ளது.

வாஷிங்டனில் உள்ள, மெக்லீன் மருத்துவமனையின் மருத்துவரும், மனவியல் துறையின் நிபுணருமான டேவில் ரோஸ்மேரின், இந்த ஆய்வு தொடர்பாக, 159 பேரிடம் பல்வேறு விதமான சோதனைகளை நடத்தினார்.

கடவுள் நம்பிக்கை, நோய் குணமடைவது குறித்த எதிர்பார்ப்பு மற்றும் சாதாரண சிகிச்சை முறை போன்றவை குறித்து, பாதிக்கப்பட்ட நபர்களிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. கடவுளிடம் அதிகமான பக்தியுள்ள நபர்களுக்கு, மனஅழுத்த நோயின் தாக்கம், மிகவும் குறைவாக இருந்தது இந்த ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது.

கடவுளைப் பற்றிய சிந்தனையோ, பக்தியோ துளியும் இல்லாத நபர்களுக்கு, மனஅழுத்தமும், நோயின் தாக்கமும் எந்த வகையிலும் குறையவில்லை.

ரோஸ் மேரின் குறிப்பிடுகையில், "கடவுளிடம் நம்பிக்கை வைப்பதன் மூலம், மனநல சிகிச்சை பெறுவோருக்கு, தங்கள் பிரச்சனையிலிருந்து விடுபடுவோம் என்ற நம்பிக்கை ஏற்படுகிறது. இதுதான் இந்த ஆய்வின் முக்கிய அம்சம். இந்த ஆய்வு, இனி வரும் மருத்துவ உலகத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறேன்'' என்றார்.

தற்காலத்தில் மனஅழுத்தம் தான் மனிதனை ஆட்கொள்ளும் பெரிய நோயாகக் கருதப்படுகின்றது. உலகில் 75 சதவீதத்தினர் மனஅழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. உலகில் நடைபெறும் தற்கொலைகளில் 90 சதவீதத்திற்கும் மேற்பட்டவை மனஅழுத்தத்தின் காரணமாக நடைபெறுபவை என்று ஒரு புள்ளி விபரம் தெரிவிக்கின்றது.

இறைவனை ஒருவர் நம்ப வேண்டிய விதத்தில் நம்பினால் அவருக்கு மனஅழுத்தம் கிஞ்சிற்றும் இருக்காது என்பது உறுதி. அந்த வகையில் இந்த ஆய்வு இஸ்லாத்தை உண்மைப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது.

நமது மறுப்பு:-

இந்த தஃப்ஸீர் தினமலர் பத்திரிக்கையிலிருந்து காப்பியடிக்கப்பட்டதாகும். ஒரிஜினல் ஆய்வறிக்கையை ஆசிரியர் கண்ணால் கூட காணவில்லை.

தஃப்ஸீர் காப்பியடிக்கப்பட்ட இடம்: https://www.dinamalar.com/news_detail.asp?id=704549

தினமலரில் வருவதை எழுத்துப்பிழைகளையும் சேர்த்து காப்பி பேஸ்ட் செய்துள்ளார் ஆசிரியர். David Rosmarin (டேவிட் ரோஸ்மரின்) எனும் பெயரை "டேவில் ரோஸ்மேரின்" என்று தப்பாக தினமலம் எழுதியுள்ளதைக் கூட ஈ-அடிச்சான் காப்பி அடித்துள்ளார்.

எங்கிருந்து காப்பியடித்தால் என்ன ஆய்வு உண்மைதானே? சொல்லப்பட்ட செய்தி உண்மை தானே?

ஒரிஜினல் செய்தி > https://www.livescience.com/29094-belief-in-god-psychiatric-treatment.html

ஏக இறைவன் அல்லாஹ்வின் நினைவால் உள்ளங்கள் அமைதியுறுகின்றன என்று அல்லாஹ் சொல்கிறான். அத்துடன் நில்லாமல் மீண்டும் "கவனத்தில் கொள்க" என்று அழுத்திச் சொல்லிவிட்டு அல்லாஹ்வின் நினைவால் மட்டுமே அமைதியுறுகின்றன என்கிறான். எந்த கடவுளாக இருந்தாலும் அந்த கடவுளின் மீது நம்பிக்கை இருந்தால் மன நோய்க்கான மருத்துவங்கள் பலனளிப்பதாகவும் விரைவாக நிவாரணம் கிடைப்பதாகவும் அந்த ஆய்வு கூறுகிறது. இரண்டும் ஒன்றா?

மற்ற தலைப்புகளை வாசிக்க https://www.piraivasi.com/p/zina-ul-abdeen.html