Saturday 2 July 2016

பிறை மீரான்: ஹிஜிரா கமிட்டியின் பின் வாசல்...


பிறைகளைப் பற்றி (முஹம்மதே!) உம்மிடம் கேட்கின்றனர். "அவை மக்களுக்கும், ஹஜ்ஜுக்கும் காலம் காட்டிகள்' எனக் கூறுவீராக! வீடுகளுக்குள் அதன், பின்வழியாக வருவது நன்மை அன்று. (இறைவனை) அஞ்சுவதே நன்மை. எனவே வீடுகளுக்கு வாசல்கள் வழியாகவே செல்லுங்கள்! அல்லாஹ்வை அஞ்சுங்கள். இதனால் வெற்றி பெறுவீர்கள்.(2:189)
கமிட்டியின் ஒரு பேச்சாளரிடம் மேற்கண்ட வசனத்தை மேற்கோள்காட்டி பிறைகள் பற்றி பேசும் வசனத்தில் வீடுகளைக் கொண்டு ஒரு உவமை வருகிறதே அது பிறைகளைக் குறித்து பேசுகிறதா என்று கேட்கப்பட்டது.
அதற்கு அந்த பேச்சாளர் இந்த உவமையின் பொருளை இதுதான் என்று விளக்கமளிக்க முடியவில்லை என்றும் பார்வையாளர்களின் சிந்தனைக்கே விடுவதாகவும் கூறினார்.
வீடுகளின் பின்வாயில் என்பது நடந்த உண்மைச் சம்பவம். ஆனால் பிறைகள் பற்றி பேசும் வசனத்தில் இது இடம்பெற்றிருப்பதால் அதை உவமையாக நினைத்து இந்த கேள்வி எழுந்திருக்க வேண்டும்.
அது தொடர்பான ஹதீஸ்
புகாரி 4512. பராஉ இப்னு ஆஸிப்(ரலி) அறிவித்தார்.
அறியாமைக் காலத்தில் அன்சாரிகள் (ஹஜ் மற்றும் உம்ராவுக்காக) இஹ்ராம் கட்டிவிட்டால் தம் வீட்டிற்குள் (அதன் முன்புற வாசல் வழியாக நுழையாமல்) அதன் பின்பக்க வாசல் வழியே நுழைந்து கொண்டிருந்தார்கள். அப்போது அல்லாஹ், ”நீங்கள் (உங்கள்) வீடுகளில் அவற்றின் பின் வாசல் வழியே நுழைவது புண்ணியமன்று; மாறாக, இறைவனுக்கு அஞ்சுபவர்தாம் புண்ணியவான் ஆவார். மேலும், நீங்கள் உங்கள் வீடுகளில் அவற்றின் முன் வாசல்கள் வழியே நுழையுங்கள்” எனும் (திருக்குர்ஆன் 02:189 வது) வசனத்தை அருளினான்.
இருந்தாலும் அது உவமையாக இருக்கும்பட்சத்தில் அந்த உவமையை கமிட்டி நம் சிந்தனைக்கு விடுவதால்
அந்த உவமையை விளங்க முயற்சித்தேன்.
(1) வீடுகள்
(2) பின்வாசல்
(3) முன்வாசல்
இவைதான் அந்த உவமையில் உள்ள மூன்று உவமைப் பொருட்கள்.
இந்த உவமைப் பொருட்களை கமிட்டியின் மாதங்களை தொடங்கும் முறையுடன் பொருத்தினேன்.
(1) மாதங்கள்
(2) உர்ஜுனில் கதீம் (என்று கமிட்டி சொல்லும் கடைசிப் பிறை)
(3) தலைப்பிறை
அதாவது கமிட்டியின் கூற்றான மாதத்தின் கடைசி பிறையான (பின்வாசல்) உர்ஜுனில் கதீமை பார்த்து அடுத்து வரக்கூடிய தலைப்பிறையை(முன்வாசல்) கணக்கிட்டு மாதங்களுக்குள்(வீடுகள்) நுழைய வேண்டும் என்பதற்கு எதிரானதாகவே இந்த உவமை இருக்கிறது.
கமிட்டி முன்னெடுத்துச் செல்லும் 2:189 அவர்களுக்கு எதிரானதாகவே இருக்கிறது.
கமிட்டியின் கூற்றை உவமையில் இணைத்தால்
***வீடுகளுக்குள்(மாதங்களுக்குள்) அதன், பின்வழியாக (உர்ஜுனுல் கதீம்) வருவது நன்மை அன்று. (இறைவனை) அஞ்சுவதே நன்மை. எனவே வீடுகளுக்கு (மாதங்களுக்கு) வாசல்கள் (தலைப்பிறை) வழியாகவே செல்லுங்கள்! அல்லாஹ்வை அஞ்சுங்கள். இதனால் வெற்றி பெறுவீர்கள்.***
கமிட்டியே, தலைப்பிறை வழியாக மாதங்களை அடைந்து அல்லாஹ்வை அஞ்சி வெற்றி பெறும் நாள் எந்நாளோ!!!!!!
பிறை மீரான்